தற்போதைய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்தது இருக்கும் முறையை (System) பராமரிப்பதற்காக அல்ல, மாறாக நாட்டை அனைத்து விதத்திலும் மாற்றியமைத்து மக்களுக்கு வளமான வாழ்க்கையை வழங்கக்கூடிய ஒரு சமூகத்தை கட்டியெழுப்புவதற்கே என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
குருநாகலில் நடைபெற்ற இலங்கை விவசாயக் கல்லூரியின் பழைய மாணவர் சந்திப்பில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர் சுட்டிக்காட்டிய முக்கிய விடயங்கள் வருமாறு:
கல்விச் சுமை மற்றும் சீர்திருத்தம்
தற்போதைய கல்வி முறை மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு தாங்க முடியாத பெரிய சுமையாக மாறியுள்ளது. பிள்ளையொன்றை பாடசாலைக்கு அனுமதிக்கும் தருணத்திலிருந்தே அது பாரிய போராட்டமாக மாறியுள்ளது. பிள்ளைகளின் புத்தகப்பை (School Bag) மட்டுமல்லாது கல்வியின் உள்ளடக்கம் மற்றும் கற்பித்தல் முறைகளும் கடுமையாகத் திருத்தப்பட வேண்டும்.
நீண்டகால வேலைத்திட்டம்
கல்வி மாற்றம் என்பது ஓர் இராத்திரியில் செய்யக்கூடிய ஒன்றல்ல. அது மனித வளம், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கலைத்திட்டங்களுடன் (Curriculum) இணைந்த ஐந்து அல்லது பத்து வருட நீண்டகால வேலைத்திட்டமாகும். இன்று பிள்ளைகளுக்கு தொழிற்கல்வி மட்டத்திற்கு பிரவேசிப்பதற்கு இருக்கும் வழிகள் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதால், அந்த வாய்ப்புகளை விரிவுபடுத்துவது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும்.
விமர்சனங்களுக்கு அஞ்சப்போவதில்லை
அமைப்பில் மாற்றங்களைச் செய்யும்போது, இதுவரை காலமும் அதனூடாக நன்மைகளைப் பெற்றவர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பது இயல்பானது என்றாலும், அந்த எதிர்ப்புகளால் அரசாங்கம் ஒருபோதும் பின்வாங்காது.
சில தரப்பினர் கல்வி மறுசீரமைப்புகளை விமர்சிப்பது நாட்டின் பிள்ளைகள் பற்றி சிந்தித்து அல்ல, மாறாக அதனூடாக அரசாங்கத்தைப் பலவீனப்படுத்தலாம் என்ற குறுகிய நோக்கத்திலாகும். இவ்வாறான சவால்களுக்கு மத்தியில் அரசாங்கம் மேலும் தைரியமடைவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.






