2026ஆம் ஆண்டுக்கான பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார். கடந்த ஜனவரி 13ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைவாக, ஜனவரி 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பாடசாலை நடவடிக்கைகள் பின்வருமாறு அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:
தரம் 1: புதிய சீர்திருத்தங்கள் அமுல்
2026ஆம் ஆண்டில் தரம் 1 இற்கு நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கு அமைவான பாடவிதான செயற்பாடுகள், முன்னரே வழங்கப்பட்ட ஆலோசனைகளுக்கு அமைய ஜனவரி 29ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்.
தரம் 6: புதிய பாடத்திட்டம் ஒத்திவைப்பு
தரம் 6 மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்படவிருந்த புதிய பாடத்திட்டத்தை (New Syllabus) நடைமுறைப்படுத்துவது 2027ஆம் ஆண்டு வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, கடந்த வருடங்களில் நடைமுறையில் இருந்த பழைய பாடத்திட்டமே 2026ஆம் ஆண்டிலும் தரம் 6 இற்குப் பயன்படுத்தப்படும்.
பாடவேளைகள் மற்றும் கால அட்டவணை
2026ஆம் ஆண்டில் தரம் 6 முதல் தரம் 13 வரையிலான வகுப்புகளுக்கு நாளாந்த பாடவேளைகளின் எண்ணிக்கை 8 ஆகத் திருத்தப்பட வேண்டும். ஒரு பாடவேளை 40 நிமிடங்களைக் கொண்டதாக அமைய வேண்டும். முன்னைய வருடங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட விதத்திலேயே இதற்கான கால அட்டவணைகள் தயாரிக்கப்பட வேண்டும்.
பாடநூல்கள் விநியோகம்
- தரம் 6 இற்கு கடந்த வருடம் மாணவர்கள் பயன்படுத்திய பாடநூல்களையே பிரதானமாகப் பயன்படுத்தி கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
- கடந்த வருடம் பயன்படுத்திய பாடநூல்களை மாணவர்களிடமிருந்து சேகரித்து, அவற்றை மீண்டும் தரம் 6 மாணவர்களுக்கு விநியோகிப்பது தொடர்பான ஆலோசனைகள் அதிபர்களுக்கு வழங்கப்படும்.
- அவசியமான தொகைக்கு மாத்திரமே புதிய பாடநூல்களை அச்சிட்டு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- தரம் 6 இற்கான பாடநூல்களின் மென் பிரதிகள் (Soft copies) கல்வி அமைச்சின் ‘e-thaksalawa’ இணையத்தளத்தில் வெளியிடப்படும்.
முன்னோடித் திட்டம் மற்றும் மறுசீரமைப்பு
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான மட்டுப்படுத்தப்பட்ட முன்னோடித் திட்டம் (Pilot Project) இவ்வருடம் சில மாகாணங்களில் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். தரம் 6 இற்காக தயாரிக்கப்பட்ட ‘மொடியூல்கள்’ (Modules) மீண்டும் மறுசீராய்வு செய்யப்பட்டு எதிர்வரும் வருடத்தில் பயன்படுத்தப்படும்.
ஆசிரியர் பயிற்சி மற்றும் உட்கட்டமைப்பு
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான ஆசிரியர் பயிற்சிகள் 2026ஆம் ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும். அத்துடன் மனித வள அபிவிருத்தி, உட்கட்டமைப்பு வசதிகள், நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் மதிப்பீட்டுச் செயன்முறைகள் இவ்வருடம் முழுவதும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.
பொது மக்களின் கருத்துக்களுக்குத் திறப்பு
உத்தேச கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பில் இதுவரை தயாரிக்கப்பட்டுள்ள எண்ணக்கருப் பத்திரம், கலைத்திட்ட சட்டகம் மற்றும் அனைத்து மொடியூல்களும் பரந்தளவிலான மக்கள் கலந்துரையாடலுக்காகவும் கருத்துக்களுக்காகவும் பொதுமக்களுக்குத் திறக்கப்படும்.
இவ்விடயங்கள் தொடர்பான உத்தியோகபூர்வ சுற்றறிக்கை மிக விரைவில் வெளியிடப்படும் எனவும் கல்விச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
புதிய கல்விச் சீர்திருத்த செயற்பாடுகள் தொடர்பில் கல்வி அமைச்சு வழங்கிய வழிகாட்டல்களுக்கு அமைய அர்ப்பணிப்புடன் செயற்பட்ட மாகாண, வலய கல்வி அதிகாரிகள், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கல்விச் செயலாளர் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது







