கல்வி மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, பாடசாலைக் கட்டமைப்பை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் 900 பாடசாலைகளுக்கு ‘ஸ்மார்ட் வகுப்பறைகளை’ (Smart Classrooms) வழங்கும் விசேட திட்டமொன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் கல்வி அமைச்சின் இசுருபாய வளாகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இங்கு கருத்துத் தெரிவித்த பிரதமர், “பாடசாலைக் கட்டமைப்பை டிஜிட்டல் மயமாக்கல் என்பது பாடப்புத்தகங்களை அப்படியே டிஜிட்டல் வடிவிற்கு மாற்றுவது அல்ல. மாறாக, தொழில்நுட்பக் கல்விக்கு ஏற்றவாறு பிள்ளைகளைத் தயார்படுத்துவதும், பிள்ளையின் மனதிற்குப் பொருத்தமான வகையிலும் பாதுகாப்பான முறையிலும் தொழில்நுட்ப அறிவை வழங்குவதே இதன் நோக்கமாகும்,” என்று குறிப்பிட்டார்.
இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கும் முகமாக, கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர மற்றும் சீனத் தூதுவர் H.E. Qi Zhenhong ஆகியோருக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பட்டது. தொழில்நுட்பக் கல்வியை பாதுகாப்பான முறையில் பிள்ளைகளுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இத்திட்டத்தின் ஊடாக:
- கிளவுட் (Cloud) தரவு மையம் (Data Center) ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளது.
- தொலைதூரக் கல்வி முறைகள் மற்றும் மீடியா ஸ்டூடியோ வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.
- விசேட வசதிகள் கொண்ட சுமார் 900 ஸ்மார்ட் வகுப்பறைகள் (Smart Boards) பாடசாலைகளுக்கு வழங்கப்படவுள்ளன.
கல்வி மறுசீரமைப்பின் கீழ் செயற்படுத்தப்படும் இத்திட்டம் இலங்கைக் கல்வித்துறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.





