தரம் 6 மாணவர்களுக்கான ஆங்கில பாட மொடியுல் தயாரிப்பதற்குப் பொறுப்பான அதிகாரிகளின் சேவையை இடைநிறுத்த கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இந்தத் தீர்மானம் இன்று (19) முதல் அமுலுக்கு வருவதுடன், பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டவர்களில் இரண்டு உயர்மட்ட அதிகாரிகளும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
- விசாரணை அறிக்கை மற்றும் பின்னணி: குறித்த ஆங்கில பாட மொடியுல் விவகாரம் குறித்து ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைக்க நியமிக்கப்பட்ட முன்னாள் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்னவின் ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தேசிய கல்வி நிறுவகத்தின் (NIE) விசேட நிர்வாக சபைக் கூட்டம் கடந்த 17 ஆம் திகதி நடைபெற்றதோடு, இதன்போது குறித்த விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, விடயம் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டுள்ளது.
- கவனயீனமே காரணம்: ஆங்கில பாட மொடியுல் தொடர்பான பிரச்சினை ஏற்படுவதற்கு அதிகாரிகளின் கவனயீனம் மற்றும் முறையற்ற செயற்பாடுகளே காரணம் என குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நிர்வாக சபை இந்த வாரம் மீண்டும் கூடி அறிக்கையின் சில விடயங்களை ஆராயவுள்ள போதிலும், அதற்கு முன்னதாகவே பணி இடைநிறுத்த நடவடிக்கை அமுல்படுத்தப்படவுள்ளதாக அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலதிக நடவடிக்கை: சம்பவம் தொடர்பில் முறையான விரிவான விசாரணைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படவுள்ளதோடு, அவ்விசாரணையின் பின்னர் பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.
aruna.lk







