எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள அரசாங்கப் பரீட்சைகளுக்கு ஏதேனும் ஒரு வகையில் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார். இன்று பிற்பகல் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக இலங்கையில் தற்போது எரிசக்தி நெருக்கடி நிலை ஒன்று உருவாகியுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலை குறித்து தெளிவுபடுத்துவதற்காகவே குறித்த விசேட செய்தியாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஆணையாளர் நாயகம், நிலவும் எரிசக்தி தட்டுப்பாடு மற்றும் அது சார்ந்த சவால்கள் காரணமாக கல்வித்துறை சார்ந்த பரீட்சை நடவடிக்கைகளில் தாக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகச் சுட்டிக்காட்டினார். ஏற்படும் தடங்கல்களைப் பொறுத்து பாதிப்புக் காலம் அமையும் என்று அவர் விளக்கினார்.
தற்போதைய உலகளாவிய போர்ச் சூழலானது நாட்டின் எரிசக்தி விநியோகத்தில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதனால் ஏற்படக்கூடிய அசௌகரியங்களைக் குறைப்பதற்கும் அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கும் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை ஆராய்ந்து வருவதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.







