மாத்தளைப் பகுதியில் 14 வயது மாணவனைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட பாடசாலை அதிபர் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை (31) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலையொன்றில் கல்வி பயிலும் மாணவன் ஒருவரே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார். இது குறித்து மகாவெல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
முறைப்பாட்டையடுத்து சந்தேக நபரான அதிபரைக் கைது செய்ய பொலிஸார் பல குழுக்களை அனுப்பி தேடுதல் நடத்தினர். எனினும், அவர் அந்தப் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்தார். அவர் பல்வேறு இடங்களில் மறைந்திருப்பதாகக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.
பொலிஸார் தன்னைத் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், தேடப்பட்டு வந்த அதிபர் இன்று (31) காலை மகாவெல பொலிஸ் நிலையத்தில் தானாக முன்வந்து சரணடைந்துள்ளார். இதனையடுத்து பொலிஸார் அவரைக் கைது செய்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மகாவெல பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர்.







