தரம் 6 ஆங்கிலப் பாடத்திற்கான மொடியூலில் (Module) இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய மற்றும் பொருத்தமற்ற பகுதிகளை நீக்கி, அந்தப் புத்தகங்களை பாடசாலைகளுக்கு விநியோகிக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
புதிய கல்வி மறுசீரமைப்பின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நூல்களில் உள்ள குறித்த பகுதிகளை நீக்கிய பின்னரே விநியோகப் பணிகள் முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.
இந்த மொடியூல் புத்தகங்கள் சுமார் 3.5 இலட்சம் பிரதிகள் அச்சிடுவதற்காக 6 கோடி ரூபாவிற்கும் அதிகமான நிதி செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது கொழும்பிலுள்ள களஞ்சியசாலைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள இந்தப் புத்தகங்கள் எவையும் இதுவரை பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படவில்லை என்பதை செயலாளர் உறுதிப்படுத்தினார்.
பொருத்தமற்ற பகுதிகள் நீக்கப்பட்டதன் பின்னர் எஞ்சிய பகுதிகள் விநியோகிக்கப்படவுள்ளதோடு, இது தொடர்பாக ஆசிரியர்களுக்குத் தெளிவுபடுத்துவதற்காக விசேட அறிவுறுத்தல் கோவையொன்றும் வெளியிடப்படவுள்ளது.
கல்வி தொழில்வல்லுநர்கள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் உலபனே சுமங்கல தேரரினால் இந்த மொடியூலின் உள்ளடக்கம் குறித்து பாரிய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
பாடமொன்றுடன் தொடர்புடைய மேலதிக விபரங்களைத் தேடுவதற்காகப் பரிந்துரைக்கப்பட்ட இணையத்தளம் ஒன்றினூடாக, ஓரினச்சேர்க்கை செயற்பாடுகளைப் ஊக்குவிக்க முயற்சிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த சர்ச்சைக்குரிய பகுதிகள் சேர்க்கப்பட்டமையானது ஏதேனும் ஒரு சதித்திட்டத்தின் விளைவாக இருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் உண்மைகளைக் கண்டறிவதற்காக கல்வி அமைச்சின் செயலாளரினால் கடந்த 31 ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக பல ஆசிரியர் சங்கங்களும் இது குறித்து முறைப்பாடு செய்துள்ள நிலையில், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தற்போது விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-Lankadeepa-







