’தித்வா’ சூறாவளி மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்களுக்கான பரீட்சைகள் நாளை (12) முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளன.
நாளை ஆரம்பமாகும் இப்பரீட்சைகள் இம்மாதம் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது குறித்து பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
- பரீட்சை அட்டவணை: திருத்தப்பட்ட புதிய அட்டவணையின்படி பரீட்சைகள் நடைபெறும். இருப்பினும், முந்தைய அட்டவணையில் குறிப்பிடப்பட்டிருந்த பரீட்சை நேரங்களில் எவ்வித மாற்றமும் இல்லை. பழைய நேரப்படியே பரீட்சைகள் நடைபெறும்.
- அடையாள அட்டை: அனர்த்த நிலைமை காரணமாக தேசிய அடையாள அட்டையைத் தொலைத்த அல்லது சமர்ப்பிக்க முடியாத மாணவர்கள், பரீட்சைக்குத் தோற்றுவதில் சிக்கல் இருக்காது. பாடசாலைப் பரீட்சார்த்திகள் அதிபரினாலும், தனிப்பட்ட பரீட்சார்த்திகள் பிரதேச செயலாளரினாலும் உறுதிப்படுத்தப்பட்ட தற்காலிக அடையாள அட்டையைப் பயன்படுத்தி பரீட்சைக்குத் தோற்ற முடியும்.
பாடசாலை விடுமுறை
இதேவேளை, உயர்தரப் பரீட்சைகள் நடைபெறவுள்ளமையினால் அரச பாடசாலைகளுக்கு இன்று (11) முதல் இம்மாதம் 20 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.







