கொழும்பு: இலங்கைப் பாடசாலைகளில் தகவல் தொழில்நுட்பக் கல்வியை (IT Education) நவீனமயப்படுத்துவதற்கும், கல்வி நடவடிக்கைகளில் தொழில்நுட்பப் பயன்பாட்டை முறைப்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டிருந்த ‘இரண்டாம் நிலை கல்விக்கான தகவல் தொழில்நுட்ப மையங்களை நிறுவும் திட்டம்’ மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
திட்டத்தின் பின்னணி மற்றும் நிதி ஒதுக்கீடு
இலங்கை அரசாங்கத்தின் நிதி மற்றும் கொரிய எக்சிம் (EXIM) வங்கியின் கீழ் இயங்கும் பொருளாதார மேம்பாட்டு ஒத்துழைப்பு நிதியத்தின் (EDCF) கடன் உதவியுடன் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது. இதனைத் தொடர்ந்து 2019 நவம்பரில் இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்ட போதிலும், பல்வேறு காரணங்களால் இத்திட்டம் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படவில்லை.
முக்கிய உட்கட்டமைப்புகள்
இந்த வேலைத்திட்டத்தின் கீழ் கல்வித்துறையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில் பின்வரும் கட்டமைப்புக்கள் உருவாக்கப்படவுள்ளன:
- தேசிய மட்டத்திலான ஈ-கற்றல் (e-Learning) மத்திய நிலையம்.
- தென் மற்றும் கிழக்கு மாகாணங்களுக்காக இரண்டு பிராந்திய தகவல் தொழில்நுட்ப மையங்கள்.
எதிர்பார்க்கப்படும் இலக்குகள்
பொதுக் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆகிய மூன்று பிரதான துறைகளையும் உள்ளடக்கிய ஒரு முறையான ஈ-கற்றல் பொறிமுறையை அறிமுகப்படுத்துவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
தற்போது நிபுணர் குழுவொன்றினால் வழங்கப்பட்ட மீளாய்வு அறிக்கையின் பரிந்துரைகளுக்கமைய, இத்திட்டத்தை உடனடியாக மீண்டும் ஆரம்பித்துச் செயல்படுத்துவதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை தனது அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.






