– ஜெஸார் ஜவ்பர்-
இலங்கையின் கல்விப் புலத்தின் மறுசீரமைப்புக்கான பரிந்துரைகளின் ஒரு கட்டமாக கல்விச் சபையை நிறுவதற்கான முன்மொழிவை உருவாக்குவதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழு மற்றும் அதற்கான தொழிநுட்பக் குழு உருவாக்கப்பட்டது.
அக்குழுவின் அறிக்கை தற்போது வௌியாகியுள்ளது. அவ்வறிக்கை தொடர்பான விரிவான பார்வை முன்வைக்கப்படுகிறது.
_____________________________________________________________
இலங்கையின் பொதுக் கல்வி முறைமையானது நீண்டகாலமாகப் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றது.
குறிப்பாக, கல்விச் சேவையில் உள்ளவர்களின் தொழில்சார் தரம், அங்கீகாரம் மற்றும் அவர்களுக்குரிய சம்பள முரண்பாடுகள் போன்ற விடயங்கள் கல்வித் துறையின் வினைத்திறனைப் பாதிக்கும் காரணிகளாக அமைந்துள்ளன.
இதனை நிவர்த்தி செய்யும் நோக்கில், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட விசேட குழு, இலங்கை கல்விச் சபைச் சட்டம் ஒன்றின் ஊடாக ஒரு சுயாதீன அமைப்பை நிறுவுவதற்குப் பரிந்துரைத்துள்ளது.
1. கல்விச் சபை நிறுவுதற்கான அவசியம் மற்றும் பின்னணி
இலங்கையில் தற்போது கல்விசார் தொழில் வாண்மையாளர்களைப் பதிவு செய்யும் முறையான ஒழுங்குபடுத்தப்பட்ட முறைமையோ அல்லது அவர்களுக்கான தர உறுதிப்படுத்தல் மற்றும் அங்கீகார முறைமையோ நடைமுறையில் இல்லை.
இதன் விளைவாக:
1. தர உறுதிப்படுத்தல் மற்றும் தொழில் வாண்மைத்துவத்தில் போதிய கவனம் செலுத்தப்படாமை
2. ஆசிரியர்கள் மற்றும் கல்வியியலாளர்களுக்கு அனுமதிப்பத்திரம் (License) வழங்கும் நடைமுறை இல்லாமை
3. வெவ்வேறு கல்விச் சேவைகளுக்கிடையே (ஆசிரியர், அதிபர், நிர்வாகி) ஒருங்கிணைப்புக் குறைபாடு
4. சம்பள முரண்பாடுகள் மற்றும் நலன்புரி விடயங்களில் உள்ள சிக்கல்கள்
இந்தச் சூழலிலேயே, 1966ஆம் ஆண்டு யுனெஸ்கோ (UNESCO) பரிந்துரைகளுக்கு இணங்க, கல்வித் துறையின் அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய ஒரு ‘கல்விச் சபை’ அவசியமாகிறது.
2. முன்மொழியப்பட்ட சபையின் கட்டமைப்பு மற்றும் நோக்கம்
புதிதாக முன்மொழியப்பட்டுள்ள இலங்கை கல்விச் சபை (SLEC), கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் ஒரு சுயாதீனமான, கூட்டிணைக்கப்பட்ட அமைப்பாக இருக்கும்.
சபையின் முக்கிய நோக்கங்கள்:
கல்விசார் தொழில் வாண்மையாளர்களைப் பதிவு செய்தல் மற்றும் அவர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குதல்.
* கல்விசார் பாடநெறிகள் மற்றும் அதனை வழங்கும் நிறுவனங்களின் தரத்தை உறுதிப்படுத்துதல் மற்றும் அங்கீகாரம் அளித்தல்.
*கல்வி அமைச்சருக்குக் கொள்கை ரீதியான ஆலோசனைகளை வழங்குதல்.
* கல்வித் துறை ஊழியர்களுக்கான தொழில்சார் நடத்தை விதிகளை உருவாக்குதல்.
நிறுவனக் கட்டமைப்பு:
சபையானது ஜனாதிபதியால் நியமிக்கப்படும் 15 உறுப்பினர்களைக் கொண்டிருக்கும்.
இதில் கல்வி நிபுணர்கள், சட்ட வல்லுநர்கள், உளவியலாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், அதிபர்கள் உள்ளிட்ட பல்வேறு கல்விச் சேவைகளின் பிரதிநிதிகள் உள்ளடங்குவர்.
சபையின் கீழ் எட்டு நிலையியற் குழுக்கள் (Standing Committees) இயங்கும். அவை தர உறுதிப்பாடு, பதிவு, நெறிமுறைகள் மற்றும் வாண்மைத்துவ விருத்தி போன்ற குறிப்பிட்ட துறைகளைக் கண்காணிக்கும்.
3. கல்வியியலாளர் வகைப்படுத்தலும் தொழில்சார் முன்னேற்றமும்
குழுவின் ஒரு முக்கியப் பரிந்துரை, கல்வித் துறையில் உள்ள அனைவரையும் கல்வியியலாளர்’ (Educator) என்ற பொதுவான சொல்லின் கீழ் கொண்டுவருவதாகும். இவர்களது தகைமைகள் மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் ஆறு நிலைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்:
1. உதவிக் கல்வியியலாளர்
2. துணைக் கல்வியியலாளர்
3. கல்வியியலாளர் (திறமையான நிலை)
4. பட்டயக் கல்வியியலாளர் (திறமை வாய்ந்த நிலை)
5. பட்டய ஆலோசனைக் கல்வியியலாளர் (நிபுணர் நிலை)
6. சிரேஷ்ட பட்டய ஆலோசனைக் கல்வியியலாளர் (புத்தாக்க நிபுணர்)
இந்த வகைப்படுத்தல், ஒரு ஆசிரியர் வெறும் கற்பிப்பவராக மட்டும் இல்லாமல், தனது தொழில் வாழ்க்கையில் தொடர்ச்சியான பயிற்சிகள் (CPD) மூலம் உயர் நிலைகளை அடைய வழிவகுக்கும்.
4. நடைமுறைப்படுத்தல் மற்றும் ஒருங்கிணைப்பு
இலங்கை கல்விச் சபையானது தற்போதுள்ள கல்வி அமைச்சு, அரசாங்க சேவை ஆணைக்குழு (PSC), பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) மற்றும் தேசிய கல்வி நிறுவகம் (NIE) ஆகியவற்றுடன் இணைந்து செயற்படும்
தீர்மானங்களை நடைமுறைப்படுத்தும் விதம்:
* கல்வி அமைச்சு: சபையின் தீர்மானங்களை அரச பாடசாலை முறைமைக்குள் அமுல்படுத்தும்
* அரசாங்க சேவை ஆணைக்குழு: சபையினால் நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வுகளை மேற்கொள்ளும்.
* டிஜிட்டல் முறைமை: முழுமையான பதிவு மற்றும் நிர்வாகச் செயற்பாடுகள் காகிதமற்ற, டிஜிட்டல் முறைமை ஊடாக முன்னெடுக்கப்படும்.
5. மேலதிகப் பரிந்துரைகள்
கல்விச் சபையை நிறுவுவதற்கு மேலதிகமாக, ‘இலங்கை கல்வியியல் பல்கலைக்கழகம்’ ஒன்றை நிறுவவும் குழு பரிந்துரைத்துள்ளது. இதன் மூலம் ஆசிரியர் பயிற்சியை நான்கு வருடப் பட்டப் படிப்பாக உயர்த்துவதற்கும், கல்வியியலாளர்களுக்குத் தேவையான பட்டப்பின் படிப்புகளை வழங்குவதற்கும் வாய்ப்பு ஏற்படும்.
இலங்கை கல்விச் சபையை நிறுவுவதானது, நாட்டின் கல்வித் துறையில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கல்வியியலாளர்களின் சமூக அந்தஸ்தை உயர்த்துவதுடன், மாணவர்களுக்குப் பண்புத் தரம் மிக்க கல்வி கிடைப்பதையும் உறுதி செய்யும். அறிக்கையின் பரிந்துரைகளை அமைச்சரவையில் சமர்ப்பித்து, விரைவாகச் சட்டமூலமாக்குவதே குழுவின் இறுதி இலக்காகும்.
இந்த முன்மொழிவு தொடர்பான பொது மக்கள் கருத்துக்கள் கோரப்பட்டுள்ளன.
அறிவித்தல் மற்றும் முன்மொழிவு அறிக்கையை தரவிறக்கம் செய்ய பின்வரும் இணைப்பில்.
https://1teachmore.lk/proposed-sri-lanka-education-council/







