2025 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க ஊழியர்களின் தேசிய குறைந்தபட்ச வேதன (திருத்தச்) சட்டத்தின் விதிகளுக்கு அமைவாக, 2026 ஜனவரி 01 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் தனியார் துறை ஊழியர்களின் தேசிய குறைந்தபட்ச சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் திருமதி எச்.எம்.டி.என்.கே. வத்தலியத்த தெரிவித்துள்ளார்.
இதன்படி, தனியார் துறை ஊழியர்களின் தேசிய குறைந்தபட்ச மாதச் சம்பளம் 27,000 ரூபாவிலிருந்து 30,000 ரூபாவாகவும், நாளாந்த சம்பளம் 1,080 ரூபாவிலிருந்து 1,200 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
வேலை வழங்குநர்களின் பொறுப்புக்கள்
இச்சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்துகையில், இடைத்தரகர்கள் அல்லது ஒப்பந்தக்காரர்கள் ஊடாகத் தொழில் அல்லது சேவையில் ஈடுபடுத்தப்படும் ஊழியர்கள் விடயத்திலும், உடனடி வேலை வழங்குநர் (Immediate Employer) மற்றும் இறுதி வேலை வழங்குநர் (Ultimate Employer) ஆகிய அனைவரும் இச்சட்ட விதிகளுக்குக் கட்டுப்பட்டவர்களாவர் என்று ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.
கொடுப்பனவு தொடர்பான நிபந்தனைகள்
திருத்தப்பட்ட சட்டத்தின் 4 ஆவது பிரிவின் பிரகாரம், வரவு செலவுத் திட்ட நிவாரணக் கொடுப்பனவுகளைச் சேர்ப்பதைத் தவிர, 2025.03.31 ஆம் திகதியன்று ஊழியர் ஒருவருக்குக் கிடைத்து வந்த வேறு எந்தக் கொடுப்பனவையும் இந்த குறைந்தபட்ச சம்பளத் தொகைக்காக ஈடு செய்ய (Set off) பயன்படுத்தக் கூடாது.
மேலும், இந்த சம்பள அதிகரிப்பானது பின்வரும் அனைத்து சட்டபூர்வ கொடுப்பனவுகளையும் கணக்கிடுவதற்கு அடிப்படையாகக் கொள்ளப்பட வேண்டும்:
- ஊழியர் சேமலாப நிதியம் (EPF)
- ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF)
- மேலதிக நேரக் கொடுப்பனவுகள் (Overtime)
- பணிக்கொடை (Gratuity)
- மகப்பேறு கொடுப்பனவுகள்
- விடுமுறை தினக் கொடுப்பனவுகள்
முறைப்பாடுகளை சமர்ப்பித்தல்
யாரேனும் வேலை வழங்குநர்கள் உரிய வகையில் இந்தக் கொடுப்பனவுகளை வழங்கத் தவறினால், அது தொடர்பான முறைப்பாடுகளை cms.labourdept.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாகத் தொழில் திணைக்களத்தின் முறைப்பாட்டு முகாமைத்துவ முறைமையில் பதிவு செய்யலாம். அல்லது, அருகில் உள்ள தொழில் அலுவலகத்தில் எழுத்து மூலமாகவும் முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்க முடியும் என்று தொழில் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்







