விசேட அரசாங்க விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ள புதன்கிழமைகளில், தனியார் மேலதிக வகுப்புகளை (Tuition Classes) நடத்துவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி அறிவித்துள்ளார். எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில் மாணவர்களின் நலன் மற்றும் வளப் பயன்பாட்டைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு போர்ச் சூழலால் இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிசக்தி மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில், வாரத்தின் ஒவ்வொரு புதன்கிழமையும் அரசாங்க விடுமுறை தினமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்த விசேட விடுமுறை தினங்களில் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டிருக்கும் நிலையில், தனியார் கல்வி நிறுவனங்கள் மேலதிக வகுப்புகளை நடத்துவதைத் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் இது குறித்து மேலும் விளக்கிய ஆணையாளர் நாயகம், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் எரிபொருளைச் சேமிக்கவும் அரசாங்கம் முன்னெடுத்துள்ள இந்த நடவடிக்கைகளுக்கு தனியார் கல்வித் துறையினரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார். இந்தத் தடையை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதன்போது எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
நாட்டின் தற்போதைய அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, மக்களின் அன்றாடத் தேவைகளைச் சீராக முன்னெடுத்துச் செல்வதற்காகவே இத்தகைய கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகத் தெரிவித்து இந்த ஊடக சந்திப்பு நிறைவு பெற்றது.







