நாட்டில் நிலவி வந்த எரிபொருள் நெருக்கடி மற்றும் தற்காலிகத் தேவைகளைக் கருத்திற்கொண்டு அரசு நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட புதன்கிழமை விடுமுறை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்யப்படுவதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி அறிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவிய பதற்றமான சூழல் மற்றும் எரிபொருள் விநியோகத்தில் ஏற்படக்கூடிய சவால்களை சமாளிப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாரத்தின் நடுப்பகுதியான புதன்கிழமை பொது விடுமுறையாக கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. எனினும், தற்போது நிலவும் தேசியத் தேவைகளைக் கருத்திற்கொண்டு இந்த விசேட விடுமுறை முறையை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் ஏப்ரல் 8 ஆம் திகதி முதல் அனைத்து அரசாங்க அலுவலகங்கள், நீதிமன்றங்கள், பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தங்களது வழக்கமான பணிகளை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரச துறை ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் கல்விப் பணியாளர்கள் அனைவரும் வாராந்த அட்டவணையின்படி அன்றைய தினம் முதல் கடமைகளுக்காக சமூகமளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அரச சேவைகள் மற்றும் கல்வி நடவடிக்கைகள் எவ்வித தடையுமின்றி முன்னெடுத்துச் செல்வதை உறுதிப்படுத்துவதற்காக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தேவையான மேலதிக அறிவுறுத்தல்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.







